Wednesday 25 June 2014

இது தான் (தன்)நம்பிக்கை! 

காம்கேர் கே புவனேஸ்வரி
      
     அன்று இரவு 7 மணி இருக்கும். எனக்கு ஒரு போன் கால் வந்தது. ‘வணக்கம்மா...வருகின்ற 25-ம் தேதி நான் HOD ஆக பதவியேற்கிறேன்…இந்த நல்ல விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் போன் செய்தேன்…’ என்று ஆரம்பித்த தொலைபேசி உரையாடல் அரை  மணி நேரம் நேரம் நீடித்தது. வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் அவர் இருந்த நிலை, படிப்படியாக முன்னேற எடுத்துக் கொண்ட சிரத்தைகள், பல வருடங்களாக நான் அவருடன் இணைந்து அவர் குழுக்களுக்கு நடத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்-இன்டர்நெட்-நெட்வொர்க்கிங் சார்ந்த ஒர்க்‌ஷாப்புகள், அவர்களுக்காக எங்கள் நிறுவனத்தில் தயாரித்து வரும்   சாஃப்ட்வேர்கள், இன்றைய மாணவர்களிடம் தென்படும் சற்றே அலட்சிய மனப்பாங்கு என்று பொதுவாக சென்று கொண்டிருந்த உரையாடல், மோடியின் வெற்றி, செயல்திறன் என்று சீரியஸாகச் சென்று, தன்னம்பிக்கைக் குறித்த சில கருத்துக்களுடன் மிக நிறைவாக நிறைவடைந்தது.
தொலைபேசி உரையாடலில், அவர் சொன்ன தன்னம்பிக்கைக் கருத்துக்கள் என்னை பிரமிக்க வைத்தது. அதைத் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு நபர் HOD ஆகியிருக்கிறார். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. சாதாரணமாக நடக்கின்ற விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவரைப் பற்றிய சிறுகுறிப்பைச் சொன்னதும் உங்கள் எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொண்டு விடுவீர்கள்.
ஆம். உண்மையில் பிரமிக்க வைக்கும் நபர் தான் அவர். அவர் ஒரு மாற்றுத் திறனாளி. இரு கண்களும் தெரியாது. மிக ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், படித்து, பட்டம் பெற்று, தமிழில் Ph.D செய்து டாக்டர் பட்டமும் வாங்கியவர். ஆரம்ப காலத்தில் கல்லூரிப் பேராசிரியராகப் பொறுப்பேற்று, படிப்படியாக முன்னேறி, தமிழ்துறைத் தலைவராக பதவியேற்றவர்.
சீனா போன்ற வெளிநாடுகளுக்கு தனி நபராகச் சென்று அங்குள்ள ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறார். கம்ப்யூட்டர்-இண்டர்நெட் நம் நாட்டில் பிரபலமாக ஆரம்பித்தத் தொடக்கக் காலங்களிலேயே கம்ப்யூட்டரை மிக இலாவகமாக கையாளப் பயிற்சி எடுத்தார். இதற்குப் பயன்படும் Screen Recognition Software-கள் மூலம் கம்ப்யூட்டரில் எம்.எஸ்.ஆஃபீஸ், இன்டர்நெட், இமெயில், கூகுல் சர்ச் சென்று அனைத்தையும் அருமையாகக் கையாளக் கூடிய நபர். மனைவி ஆசிரியராகப் பணி புரிகிறார். இவருடைய மகள் எம்.பி.ஏ படிக்கிறார்.
இவர், கம்ப்யூட்டர், இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல், லேப்டாப், மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படுகின்ற சாஃப்ட்வேர்கள் என்று தொழில்நுட்பத்துக்குத் துணை போகின்ற அத்தனை விஷயங்களையும் அப்டேட் செய்து வைத்திருக்கிறார்.
கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட், உயர்ரக மொபைல், சாஃப்ட்வேர்கள் என்று தொழில்நுட்ப விஷயங்களுக்கு, அதிகம் செலவு செய்யும் அவர், கார் வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார். ஏன் என்று காரணம் கேட்டதுக்கு அவர் கொடுத்த விளக்கம் வியக்க வைத்தது.
தொழில்நுட்ப விஷயங்கள் உலக நடப்புகளை நான் அறிந்து கொள்ளவும், என் பணிச் சுமையைக் குறைத்துக் கொள்ளவும் உதவுகிறது. குறிப்பாக நானே அவற்றை நேரடியாகப் பயன்படுத்த முடிவதால், அவை எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கின்றன. 
ஆனால் கார் வாங்கினாலும், காரை நான் ஓட்ட முடியாது. பிறரை நம்பித் தான் சொந்த காரில் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே, எனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. அதற்கு பதிலாக, எப்போது வெளியில் செல்ல வேண்டுமோ, அப்போது போன் செய்து சொன்னால், அடுத்த கால் மணி நேரத்தில், கால் டாக்ஸி வீட்டு  வாசலில்  வந்து நமக்காகக் காத்திருக்கப் போகிறது. நாம் கம்பீரமாக காரில் சென்று வரலாம்.
இவர் சொன்னக் கருத்துக்கள் நம் அனைவருக்கும் பொருந்தும் தானே? சிந்தித்துப் பாருங்கள்…
தன்னம்பிக்கை என்பது பிறரால் பெறுவது அல்ல. நாம் செய்கின்ற செயல்களால் நமக்குள் தானாக பொங்கி எழுவது தான் உண்மையான தன்னம்பிக்கை. ஒரு செயலை செய்யும் போது அது கொடுக்கும் புத்துணர்ச்சி, பூரிப்பு, மனநிறைவு இவைதான் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் காரணிகள். ஒருபோதும் தன்னம்பிக்கையை பிறர் நமக்குள் திணிக்கவே முடியாது.
தன்னம்பிக்கையை எப்படி பிறரால் நமக்குக் கொடுக்க முடியாதோ, அதுபோல அவநம்பிக்கையையும் பிறர் நமக்குள் திணிக்க முடியாது. எந்த வேலையிலும் ஈடுபாடில்லாமை, ஒருவித மனச்சோர்வு, சலிப்பு இவைதான் அவநம்பிக்கையின் அறிகுறிகள். ஆரம்பத்திலேயே அவற்றைக் கண்டறிந்து களை எடுத்து விட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்.
நமக்கு தன்னம்பிக்கைக் கொடுக்கின்ற விஷயங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். நம் நம்பிக்கையைக் குலைக்கும் விஷயங்களைக் கண்டறிந்து, அவற்றைக் களை எடுப்போம்.

வெற்றி நிச்சயம்.

Wednesday 18 June 2014

இந்த நிமிடம்…இந்த நிமிடம்…இது உங்களுக்கு மட்டும் தானே! 

காம்கேர் கே. புவனேஸ்வரி



      சிலர் வாழ்க்கையில் ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். கை நிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள். ஆனால், செலவு செய்ய அத்தனை யோசிப்பார்கள். எதிர்காலத்துக்காக வீடு, குழந்தைகளுக்காக சேமிப்பு, வங்கிக் கணக்கு, அசையா சொத்து, தங்க, வைர, வைடூர்ய, பிளாட்டின ஆபரணங்கள் என்று சொத்துக்களைச் சேர்த்து இவைகள் தான் வாழ்க்கையின் மூலதனம் என்று பெருமகிழ்ச்சி அடைவார்கள். நிகழ்காலத்தில் எதையுமே அனுபவிக்காமல் சந்தோஷத்தை வீணடிப்பார்கள். நிகழ்கால சந்தோஷம் தான் நிலையான சொத்து, நிம்மதியான வாழ்க்கை என்ற எண்ணமே அவர்களுக்கு வருவதில்லை. சேமிப்பும், குடும்ப எதிர்காலத் திட்டமும் தேவை தான். ஆனால், வாழ்க்கை அதற்காக மட்டுமே இல்லை அல்லவா? இவர்கள் சேர்த்து வைக்கும் சொத்துக்களை எல்லாம் யார் எப்படி அனுபவிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாத ஒரு புதிர் தான். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையின் இரகசியத்தைப் புரிய வைக்க இதோ ஒரு கதை:
இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மனிதனிடம், கடவுள் கையில் மிகப்பெரிய பெட்டியுடன் வந்தார். இருவருக்கும் நடந்த உரையாடல்…
கடவுள்: ‘ம்...ம்… கிளம்பு…கிளம்பு… இவ்வுலகில் உனக்கான நேரம் முடிஞ்சு போச்சு…’
மனிதன்: ‘என்ன நேரம் முடிஞ்சு போச்சா… நான் செய்ய வேண்டியப் பணிகள் ஏராளமாக உள்ளனவே…இன்னும் சிலகாலம் என்னை வாழவிடுங்கள் கடவுளே!’
கடவுள்: ‘இல்லை மனிதா, உன் நேரம் முடிஞ்சுப் போச்சு…சீக்கிரம் இந்த பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பு’
மனிதன்: ‘இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது கடவுளே?’
கடவுள்: ‘உன்னுடைய உடைமைகள்’
மனிதன்: ‘என்னுடைய உடைமைகளா? வாவ்… அப்படியென்றால் அவை என் உடைகளும், பொருட்களும், பணமுமா?’
கடவுள்: ‘இல்லை மனிதா, அவை உனக்குச் சொந்தமானவை இல்லை. ஏனெனில், அவற்றை நீ உழைத்து சம்பாதித்து சேமிக்க இந்த பூமி தானே காரணமாக இருந்தது. எனவே, அவை இந்த பூமிக்குச் சொந்தமானவை’
மனிதன்: ‘சரி…அவை என் நினைவுகளா?’
கடவுள்: ‘அவை என்றுமே உனக்குச் சொந்தமாக முடியாது. ஏனெனில்  சந்தோஷம், துக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படுத்துகின்ற நினைவுகள், அவை நடந்த காலத்துக்குச் சொந்தமானவை. அந்தந்த நேரத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளும், செயல்பாடுகளும் ஏற்படுத்துகின்ற உணர்வுகள் பதிய வைக்கும் நினைவுகள், காலத்துக்குத் தானே சொந்தமாக இருக்க முடியும். அவை எப்படி உனக்குச் சொந்தமாக முடியும்? எனவே உன் நினைவுகள் நேரத்துக்குத் தான் சொந்தம்’
மனிதன்: ‘அப்படியென்றால் அவை என் திறமைகளா?’
கடவுள்: ‘நிச்சயம் இல்லை மனிதா? ஏனெனில் உன் சூழல் தான் உன் திறமைகளை வளர்த்தெடுத்தது. அமைதியான சூழல் உன் கற்பனையை வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனந்தமான சூழல் உன் கற்பனைக்கு வடிவம் கொடுத்திருக்கலாம்.  எனவே, உன் திறமைகள்  நிச்சயம் சூழலுக்குத் தான் சொந்தம்’.
மனிதன்: ‘ஓ…சரி, என் நண்பர்களும், உறவுகளுமா?’
கடவுள்: ‘இல்லவே இல்லை மனிதா, அவர்கள் வாழ்க்கைப் பாதையில் உன்னோடு சேர்ந்து பயணித்தவர்கள் என்பதால், அவர்களும் உனக்குச் சொந்தமானவர்கள் இல்லை. உன் வாழ்க்கைப் பாதைக்குச் சொந்தமானவர்கள்’
மனிதன்: ‘ம்…சரி அப்படியென்றால் என் மனைவியும், குழந்தைகளுமா?’
கடவுள்: ‘இல்லை, இல்லவே இல்லை… அவர்கள் உன் அன்பிற்கும், பாசத்திற்கும், பரிவிற்கும், காதலுக்கும் வடிகாலாக இருந்தவர்கள். அவ்வுணர்வுகள் உன் இதயத்துக்கு இதமளித்திருக்கும், உன் வாழ்க்கைப் பாதைக்கு சுவாராஸ்யம் கொடுத்திருக்கும். எனவே, உன் மனைவியும், குழந்தைகளும் உன் இதயத்துக்குச் சொந்தமானவர்கள்.’
மனிதன்: ‘சரி கடவுளே, அப்படியென்றால் என் உடலா?’
கடவுள்: ‘மனிதா, உன் உடல் இந்த மண்ணுக்குத் தான் சொந்தம்’
மனிதன்: ‘அப்படியானால் அது என் ஆன்மா? சரிதானே கடவுளே?’
கடவுள்: ‘நிச்சயமாக இல்லை. உன் ஆன்மா எனக்கு மட்டுமே சொந்தம். வேறு யாரும் அதற்குச் சொந்தமோ, உரிமையோ கொண்டாடவே முடியாது’
மனிதனுக்கு இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. மனம் நொந்து போய் மிக பதட்டத்துடன் அப்பெட்டியைத் திறந்து பார்த்தான். அப்பெட்டி காலியாக இருந்தது. மனிதனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவன் கடவுளைப் பார்த்துக் கேட்டான்: ‘கடவுளே இந்த  உலகை விட்டுச் செல்லும் போது எனக்கு எதுவுமே கிடையாதா?’
அதற்குக் கடவுள் சொன்னார்: ‘ஆம். இப்போது சொன்னாயே மனிதா, இது தான் சரியான பதில்… ஒவ்வொரு நிமிடமும் நீ வாழ்ந்து அனுபவித்த வாழ்க்கை அனுபவம் மட்டுமே உனக்குச் சொந்தமானது.’
இந்த கற்பனைக் கதையில் வரும் மனிதனிடம் கடவுள் சொன்னதைப் போல,  கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கை நமக்கு இருக்கும் வரை அதை சந்தோஷமாக அனுபவிக்க கற்றுக் கொள்வோம்.
இறந்த காலம் முடிந்து விட்டது. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். அதன் படிப்பினையில் நிகழ்காலத்தில் ஆனந்தமாய் வாழ முயற்சிப்போம். அது கற்றுக் கொடுக்கும் பாதையில் வருங்காலத்தை வரவேற்போம்.

இறந்தகாலத்தை மாற்றவோ, வருங்காலத்தை நிர்ணயிக்கவோ நம்மால் முடியாது. ஆனால் நிகழ்காலம் நம் கையில். அது மட்டுமே நிதர்சனம். அதை நின்று, நிதானித்து சுவாசிப்போம். ஆக. நில். கவனி. செல்.  

Wednesday 11 June 2014


ஹாய்,
     இன்று எந்தெந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், எப்போது மூன்று புள்ளிகள் வைத்து தொடர வேண்டும் என்ற தத்துவத்தை அழகான கதை மூலம் சொல்கிறேன்
- காம்கேர் கே புவனேஸ்வரி
      வாழ்க்கை என்பது, நாணல் போன்றது; சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பலருக்கு ஓரளவுக்கு வளைந்து கொடுப்பதற்கும், முற்றிலும் முறிந்து போகும் அளவிற்கு வளைந்து கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சூழலுக்கு ஏற்ப நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம் தான். அதன் எல்லை எதுவரை என்றும் தெரிந்து வைத்துக் கொள்வது அதைவிட முக்கியம்.  பக்குவப்படுத்திக் கொள்வதாக நினைத்துக் கொண்டு முற்றிலும் நம்மைத் தொலைத்து விடக் கூடாது. தீய சூழலுக்குள் நாம் தொலைந்து விடாமல் இருக்கும் சூட்சுமம் நம் கைகளில் தான் உள்ளது.
      உதாரணத்துக்கு ஒரு அலுவலகத்துக்குப் புதிதாய் வேலைக்குச் சேர்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த அலுவலகத்தின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டியது நம் கடமை. அலுவலக வேலைநேரம், உடைக் கட்டுப்பாடு இன்னபிற அடிப்படை விஷயங்களுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்வது தான் நம் வேலைக்கும், வேலை செய்கின்ற நிறுவனத்துக்கும் நாம் கொடுக்கும் மரியாதை.
      ஆனால் அந்த அலுவலகத்தில் உள்ள ஒரு மேலதிகாரி தனிப்பட்ட முறையில் நம்மை தொந்திரவு கொடுத்தால் அதற்கு நாம் உடன்பட வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. கொஞ்சம் கூட வளைந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக நமக்கு அதில் உடன்பாடில்லை என்பதை தெரிவிக்கக் காலம் கடத்தக் கூடாது. ஆரம்பத்திலேயே அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும். முற்றுப் புள்ளி வைக்காமல் மூன்று புள்ளிகளை வைத்து அந்தச் சூழலைத் தொடர விட்டுக் காலம் கடத்தினால், நம்மைப் பற்றிய மதிப்பீடு தவறாக எதிராளியின் மனதில் பதிவாகும். பிரச்சனைகள் வலுக்க நாமே காரணமாகி விடுவோம். பின்னர், நாமே நினைத்தாலும் அதிலிருந்து வெளியே வருவது சிரமமாகி விடும்.
      நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றவர்கள் நெருக்கடிக் கொடுக்கத் தொடங்குவதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு, அதில் சிக்காமல் சுதாகரித்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஓரிடத்தில் சற்றே நெகிழ்ந்து இடமளித்து விட்டால், அந்த இடத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு, நம்மை நசுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
      நம் உடலிலும், மனதிலும் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று. சுருங்கச் சொன்னால் தவறான விஷயங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். 
      இதை விளக்குவதற்கு எரிகின்ற அடுப்பில் உள்ள தண்ணீரில் தவறித் தாவி விழுந்த ஒரு தவளையின் கதையைப் பார்ப்போம். தவளை தண்ணீரில் விழுந்த போது அடுப்பு அப்போது தான் எரிய ஆரம்பித்திருந்ததால், தண்ணீர் மிக மிதமான சூட்டில் இருந்தது. எனவே தவளையும் சொகுசாக தண்ணீருக்குள் அமர்ந்திருந்தது. நேரம் செல்லச் செல்ல தண்ணீரின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வந்தது. தவளையும் அதற்கேற்ப, தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வந்தது.
      இது தான் தவளையின் குணம்: வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
      பொறுக்க முடியாத உச்ச கட்ட வெப்பநிலையை தண்ணீர் அடையும் போது, அதன் தாக்கத்தைத் தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்தது. ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சித்தாலும் வெளியே குதிக்கவே முடியவில்லை.

      ஏன் என்றால்... தவளை தண்ணீரின் வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால், அது வலுவிழந்து தொய்ந்து போய் விட்டது.
வெளியே வரவும் முடியாமல், தண்ணீரின் வெப்பத்தையும் தாங்க முடியாமல் விழி பிதுங்கி வெந்நீருக்குள்ளேயே இறந்து விட்டது.

      இந்தக் கதையில் வரும் தவளையை எது கொன்றது? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலானோரின் பதில் கொதிக்கும் நீர் என்று தான் கிடைக்கும். ஆனால் உண்மையில், சரியான நேரத்தில் வெப்பமான தண்ணீரில் இருந்து தப்பித்து வெளியேற வேண்டும் என்று முடிவெடுக்காத தவளையின் இயலாமை தான் அதன் கோர முடிவுக்குக் காரணம். தாவிக் குதிப்பது தவளைக்கு ஒன்றும் இயலாத செயலல்ல. அதன் இயல்பு தான். ஆனாலும் முடிந்த வரை வெப்பத்துக்கு ஈடு கொடுத்துக் கொண்டே வந்தது. இறுதியில் உடல் வலுவிழந்து, தாவிக் குதிக்கும் தன் இயல்பான செயலைக் கூட செய்ய முடியாமல் இறந்து விட்டது.
      நாமும் அப்படித்தான் தேவையில்லாமல் எல்லோரிடமும் அனுசரித்துச் செல்கிறோம். அவசியமில்லாமல் சூழலுக்குக் கட்டுப்படுகிறோம். பின்பு நாமும் அவற்றுக்கு முற்றிலும் அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர  நினைத்தாலும் முடியாத ஒரு எல்லைக்குச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.
      நாம் எப்போது அனுசரித்துப் போக வேண்டும், எதற்கு அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதையும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் எதற்கெல்லாம் போராட வேண்டும்  என்பதையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். கட்டாயமாக கவனமாக இருக்க வேண்டும்.
      கப்பலுக்கு வெளியே இருக்கும் கடல் தண்ணீர், கப்பலை ஒன்றும் செய்து விட முடியாது. அந்தத் தண்ணீர் கப்பலுக்குள் வந்தால் தான் ஆபத்து. அதுபோல தான் ஆபத்துக்களும், பிரச்சனைகளும் நாம் அனுமதித்தால் ஒழிய அவற்றால் நம்மை அழிக்க முடியாது.

      எந்தெந்த விஷயங்களுக்கு உடனடி முற்றுப் புள்ளி வைக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களுக்கு மூன்று புள்ளிகள் வைத்து தொடர வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது ஒன்று தான் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. இதைச் சரியாக செய்து விட்டால் பலாபலன்களை அதன் வழியில் விட்டு விட்டு நிம்மதியாக நம் பாதையில் சென்று கொண்டே இருக்கலாம். வெற்றி நிச்சயம்.

Wednesday 4 June 2014

ஹாய்,
நாம் தன்னிறைவுடன் வாழ்வதற்கு நம் உடலும் ஒத்துழைக்க வேண்டும். உடல்நிலை சரியாக இருந்தால் நம் மனமும் சீராக இருக்கும். நாம் எண்ணியதை முடிக்க முடியும். ஆம். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். எனவே, உடலைக் காத்து மனதைப் போற்றுவோம். உடல் ஆரோக்கியம் தான் நமக்கு நம்பிக்கையையும்,  தன்னம்பிக்கையையும் கொடுக்கும் சக்திகளிலேயே முதன்மையானதாகும்.
நம் உடல் ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
இதைப்பற்றி இப்போது பார்க்கலாமா?
- காம்கேர் கே புவனேஸ்வரி


நேரம்
உடல் உறுப்பு
பணி
விடியற்காலை
3.00 மணி – 5.00 மணி
நுரையீரலின் நேரம்
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாக சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை
5.00 மணி – 7.00 மணி
பெருங்குடலின் நேரம்
காலைக் கடன்களை இந்த நேரத்தில் முடித்து விட வேண்டும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை
7.00 மணி – 9.00 மணி
வயிற்றின் நேரம்
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவது தான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.   
காலை
9.00 மணி – 11.00 மணி
மண்ணீரலின் நேரம்
காலையில்  உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் இரத்தமாகவும் 
மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக்
  குடிக்கக் கூடாது. மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு 
நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல்
11.00 மணி – 1.00 மணி
இதயத்தின்  நேரம்
இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல்
1.00 மணி – 3.00 மணி
சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில் மிதமான மதிய உணவை உண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது. 
பிற்பகல்
3.00 மணி – 5.00 மணி
சிறுநீர்ப்பையின் நேரம்
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை
5.00 மணி – 7.00 மணி
சிறுநீரகங்களின் நேரம்
பகல் நேர பரபரப்பில் இருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு
7.00 மணி – 9. 00 மணி
பெரிகார்டியத்தின் நேரம்
பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இதயத்தின் Shock Absorber இதுவே இரவு உணவுக்கு உகந்த நேரம்.
இரவு
9.00 மணி – 11. 00 மணி
உறங்கச் செல்லும் நேரம்
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது  நல்லது
இரவு
11.00 மணி – 1. 00 மணி
பித்தப்பை இயங்கும் நேரம்
இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்கக் குறைபாடு ஏற்படும்.
இரவு
1.00 மணி – 3. 00 மணி
கல்லீரலின் நேரம்
இந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ, விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்தகரிக்கும் நேரம் இது. இந்த பணி பாதிக்கப்பட்டால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுப்வீர்கள்