Wednesday 30 July 2014

வெர்ச்சுவல் உலகம் - சைபர் வேர்ல்ட்

காம்கேர் கே புவனேஸ்வரி
அப்பா, அம்மா, குழந்தைகளால் உருவாவது ஒரு குடும்பம்; ஒரு வீடு. பல வீடுகள் சேர்ந்தது ஒரு தெரு. பல தெருக்கள் சேர்ந்தது ஒரு ஊர். பல ஊர்கள் சேர்ந்தது ஒரு நகரம். பல நகரங்கள் சேர்ந்தது ஒரு நாடு. பல நாடுகள் இணைந்தது தான் இந்த உலகம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகில் நம் அனைவரையும் பின்னிப் பிணைப்பது மனிதாபிமானம் ஒன்று தான்.
நமக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது தான் கம்ப்யூட்டர். தனிநபர்களிடம் இருக்கின்ற கம்ப்யூட்டர்கள் அவர்களுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருப்பதால், அவற்றை ஒருங்கிணைத்து நெட்வொர்க்காக்கினால் அவற்றின் பயன்களை பலமடங்காக்கிக் கொள்ளலாம்; மேலும் தபால், தொலைபேசி இவற்றை விட இன்னும் அதிவேகமாக தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற உயரிய நோக்கத்தில் தான் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள தனிநபர்களிடம் இருக்கும் தனி கம்ப்யூட்டர்கள், ஒரே அலுவலக வளாகத்தினுள் அல்லது நிறுவனங்களுக்குள் லோக்கல் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர்கள், வெவ்வேறு இடங்களில் இயங்கி வரும் நிறுவனங்களுக்கான இன்ட்ராநெட் இணைப்பில் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை உலகளாவிய அளவில் இணைத்தால், மாபெரும் நெட்வொர்க்காக்கினால் உலகம் முழுவதும் இயங்கி வரும்  கம்ப்யூட்டர்கள் அனைத்துமே இணைக்கப்பட்டு பெரும் பயனை கொடுக்கும் என்ற யோசனையின் விளைவு தான் இன்டர்நெட் கண்டுபிடிப்பு.
இன்டர்நெட் & உலகம் முழுவதும் இயங்கி வரும் கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் இணைக்கின்ற ஒரு மாபெரும் நெட்வொர்க். இதன் மூலம் கிடைக்கின்ற பயன்களை விரல் விட்டு எண்ணி சொல்லி விட முடியாது.
மனிதர்களால் நிரம்பி வழியும் இந்த உலகில் மனிதர்களுக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வளர்ச்சியில், இன்டர்நெட் என்பது மற்றொரு உலகத்துக்கு வித்திட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.   
இன்டர்நெட் மூலம், நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்ய முடியும். எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டால் போதுமானது. எடுப்பார் கைப் பிள்ளை என்று சொல்வார்களே... அந்த பழமொழி இன்டர்நெட்டுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். யார் அதனை எப்படிப் பயன்படுத்துகிறார்களோ, அதற்கேற்ப அதன் பயன்பாடும் மாறுபடும். உதாரணத்துக்கு, ஒரு எழுத்தாளர் பயன்படுத்தும் போது இன்டர்நெட் தொழில்நுட்பம் ஏதோ அவருக்காகவே வடிவமைக்கப் பட்டதைப் போல தோன்றும். ஒரு ஆர்டிஸ்ட் பயன்படுத்தும் போது, ஒரு ஆர்டிஸ்டுக்காகவே தான் இன்டர்நெட் தொழில்நுட்பம் வடிவமைக்கப் பட்டதைப் போல தோன்றும். ஏன்...ஒரு குழந்தை பயன்படுத்தும் போது, அக் குழந்தைக்காகவே  இன்டர்நெட் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதைப் போல தோன்றும்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில், டிவியை பார்க்கிறோம், ரேடியோ கேட்கிறோம், செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகள் படிக்கிறோம், சினிமாவுக்குச் செல்கிறோம், கோயிலுக்கு போகிறோம், சமைத்து சாப்பிடுகிறோம், ஓட்டலுக்குச் செல்கிறோம், சுற்றுலா செல்கிறோம், வேலைக்குப் போகிறோம், நூலகம் செல்கிறோம், கடைக்குச் செல்கிறோம், பள்ளி, கல்லூரிக்கு செல்கிறோம், தொலைபேசி கட்டணம், மின் கட்டணம் என்று பல்வேறு கட்டணங்களை கட்டுகிறோம், வங்கிக்குச் செல்கிறோம், திருமணம் செய்கிறோம், குழந்தைகளை வளர்க்கிறோம், மருத்துவமனை செல்கிறோம்... இப்படி பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் போல மற்றொரு உலகம் இன்டர்நெட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை வெர்ச்சுவல் உலகம்(க்ஷிவீக்ஷீtuணீறீ கீஷீக்ஷீறீபீஎனலாம். கம்ப்யூட்டர், இன்டர்நெட் சார்ந்து உருவாகியிருக்கும் வெர்ச்சுவல் உலகை, சைபர் உலகம்(சிஹ்தீமீக்ஷீ கீஷீக்ஷீறீபீ) என்றும் சொல்லலாம்.
இன்டர்நெட் உலகத்தோடு இணைந்து பயணம் செய்யும் போது தான் நம்மால் இந்த உலகத்தோடு ஒட்டி வாழ முடியும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் நாம் செய்கின்ற அத்தனை வேலையையும், இன்டர்நெட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் வெர்ச்சுவல் உலகிலும் செய்ய முடியும்.
இப்போது இந்த உலகம் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. ஒன்று நேரடியாக அந்தந்த அலுவலகங்களுக்குச் சென்று வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது; மற்றொன்று இன்டர்நெட்டில் ஆன்லைனில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அவற்றைப் பெறுவது.
இனி வரும் காலத்தில் எல்லாமே இன்டர்நெட் மயமாக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள், தியேட்டர்கள், கடைகள், லைப்ரரிகள், பள்ளிகள், கல்லூரிகள்...இப்படி எல்லாமே இருக்கும் இடம் தேடி இன்டர்நெட் மூலம் வந்து விடும். மனிதர்களின்  சேவைகள் குறைந்து எங்கும் எதிலும் கம்ப்யூட்டர்  மற்றும் அதன் தொழில் நுட்பங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத குறையாக மனித உதவி குறைந்து போயிருக்கும். எனவே, இப்போதிலிருந்தே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தோடு இணைந்து வளர்ந்து வாருங்கள். அப்போது தான் இனி வரும் காலத்தில் மற்றவர்களை சார்ந்திருக்காமல் வாழ முடியும்.
நம் நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் நிறைய பேர் இருந்த காலகட்டத்தில், போஸ்ட் ஆஃபீஸிற்கு சென்று மணியார்டர் அனுப்பவும், கடிதம் எழுதவும், தங்களுக்கு வந்த கடிதத்தைப் படிக்கவும், வங்கிக்குச் சென்று பணம் கட்டவும், பணம் எடுக்கவும் எத்தனை பாடுபட்டார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் பிறரை சார்ந்தே வாழ வேண்டி இருந்தது. கல்வி கற்பவர்கள் அதிகரிக்க ஆரம்பித்த பிறகு இந்நிலை மாறியது. இன்றும் அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தட்டுத் தடுமாறி வருவதைக் காண முடிகிறது.
இமாலய உயரத்தை அடைந்த பிறகும், இன்னும்...இன்னும் என்று தொழில்நுட்ப தாகம் தணியாமல் வேக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய தொழில்நுட்ப உலகில் அதனோடு இணைந்து பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் எழுதப் படிக்கத் தெரியாத நபர்கள் எப்படி இச்சமுதாயத்தில் மற்றவர்களை சார்ந்தே வாழ வேண்டி இருந்ததோ அதே நிலை தான் உங்களுக்கும் ஏற்படும். அவர்களுக்காவது உதவி செய்ய படித்த மனிதர்கள் இருந்தார்கள். இனி வரும் காலத்தில் இயந்திரங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும். நீங்கள் இயந்திரங்களோடு தான் பயணிக்க வேண்டியிருக்கும். உதவி செய்ய மனிதர்கள் இருக்க மாட்டார்கள். இயந்திரங்கள் மட்டுமே இருக்கும்.
ஒரு சிறிய கற்பனை செய்து பாருங்கள்...உங்களுக்கு வங்கிக்குச் சென்று பணம் எடுக்க வேண்டும். வங்கியிலுள் உங்களைச் சுற்றி கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் இணைப்பில் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறன. உங்களுக்கு கம்ப்யூட்டரையோ, இன்டர்நெட்டையோ பயன்படுத்தத் தெரியாது. மனித நடமாட்டமே இல்லை. யாரிடம் உதவி கேட்பீர்கள்? உதவியையும் கம்ப்யூட்டரிடம் தான் கேட்க வேண்டும். அதில் பிமீறீஜீ பட்டனை அழுத்தி உதவி கேட்கலாம். ஆனால் அந்த பட்டன் எங்கிருக்கிறது? அதை கிளிக் செய்தால் அது என்ன சொல்கிறது? என்றெல்லாமாவது உங்களுக்குப் புரிய வேண்டுமே? எதுவுமே தெரியாது உங்களுக்கு...தலையைச் சுற்றுகிறது...பணம் எடுக்காமல் வீட்டிற்கு திரும்பி விடுகிறீர்கள். வங்கியில் உங்கள் அக்கவுண்டில் நிறைய பணம் இருந்தும், அன்றைய தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் தவிக்கிறீர்கள்.
வெர்ச்சுவல் உலகில் பயணிக்க அடிப்படை தொழில்நுட்பங்களை ஓரளவுக்காவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லை என்றால், மேலே சொன்ன கற்பனை நிஜமாவது உறுதி.
வளர்ந்து விட்ட அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் எல்லா வேலைகளையும் நாம் தான் செய்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது, டயர் பஞ்சரானால் பழுது பார்ப்பது, வாட்டர் சர்வீஸ் செய்து கொள்வது, வீட்டில் சுவருக்கு பெயிண்ட் அடிப்பது, டைல்ஸ் மாற்றுவது என்று சுலபமான வேலை முதல் கடினமான வேலை வரை அத்தனையையும் நாம் தான் செய்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான கருவிகள் வசதியாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் வளர்ந்து விட்ட மேலை நாடுகளில் ஜீவனம் செய்வது மகா கஷ்டம்.
அந்நாடுகளில் பயணம் செய்யும் போது வழி தெரியவில்லை என்று யாரிடமும் வழிகூட கேட்க முடியாது. ஜி.பி.எஸ் என்ற இயந்திரம் தான் காரில் வழி சொல்லிக் கொண்டே வரும். இயந்திரம் வழிகாட்டிக் கொண்டே வர, மனிதர்கள் அதன்படி காரை செலுத்திக் கொண்டே வருவார்கள்.

மேலைநாடுகளைப் பார்த்து நிறைய மாறிக் கொண்டே வரும் நம் மக்கள், அவர்களைப் போல தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் முழுமையாக பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் வரும் காலத்தில் நம் நாட்டிலும் இயந்திரங்கள் மனிதர்களை வழிநடத்தும் சூழல் உண்டாவது உறுதி. அப்போது தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரியாமல் தவிக்காமல் இருக்க இப்போதே கம்ப்யூட்டர், இன்டர்நெட் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள். எனவே, வந்த பின் திண்டாடுவதை விட, வரும் முன் காப்போம் என்ற கருத்தை மனதில் கொண்டு இதுவரை கம்ப்யூட்டர், இன்டர்நெட்டை விலக்கி வைத்திருந்தவர்கள் அதனோடு நட்பு பாராட்டத் தொடங்குங்கள்.
(நன்றி: நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - விகடன்)

Wednesday 23 July 2014

சீண்டும் மனிதன், சீறும் இயற்கை

சீண்டும் மனிதன், சீறும் இயற்கை
காம்கேர் கே புவனேஸ்வரி
இயற்கையை ஒதுக்கி விட்டு,  நாம் உயிர் வாழ முடியாது. உயிர் வாழ்தலுக்கு இயற்கை அவசியமாகிறது. பூமி மனிதனுக்கு சொந்தமல்ல. மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன். இது தெரியாமல் அல்லது புரியாமல் அல்லது புரிந்து கொண்டிருந்தாலும் புரியாததைப் போல, என்னவோ பூமியை தான், தான் ஆண்டு கொண்டிருப்பதைப் போல மாயையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன். மேலும் இவ்வுலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இந்த உயிரினச் சங்கிலித் தொடர்பில் மனிதன் மட்டும் பிரதானமல்ல. அவனும் ஓர் அங்கம்.
               ஆதிகாலத்தில் மனிதன் இயற்கையோடு இயற்கையாய் இணைந்து வாழ்ந்தான். இயற்கையை பஞ்சபூதங்களாக பிரித்து, அவற்றை பூமாதேவி, காங்கா தேவி, அக்கினி பகவான், வாயு பகவான் என தெய்வங்களாக பாவித்து, இயற்கையை அழிக்க பயந்து மரியாதையுடன் வழிபட்டு அதனோடு இணைந்து மிக சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்ற ஐம்பூதங்களும் மனிதனுக்கு இலவசமாக இயற்கையில் கிடைத்தன. இவ்வுலகில் தோன்றிய அனைத்து ஜீவன்களும் அவற்றை சுதந்திரமாக அனுபவித்தன. இயற்கையை யாரும் பணம் கொடுத்து அனுபவிக்கவில்லை. ஆனால் இன்று, இயற்கை அனைத்தும் தனிப்பட்ட நபர்களின் சொத்தாகிவிட்டது.
குடிக்கும் தண்ணீர், வசிக்கும் நிலம், அடுப்பெரிக்க உதவும் நெருப்பு, இயற்கையை இரசிப்பதற்கு கட்டணம் என்று பஞ்ச பூதங்கள் அனைத்தையும் காசு கொடுத்து பயன்படுத்தும் நிலைமைத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. 30 வருடங்களுக்கு முன் குடிக்கும் தண்ணீரை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டி வரும் என்று யாராவது நினைத்தாவது பார்த்திருப்போமா? அதுபோல சுவாசிக்கும் காற்றுக்கே பணம் செலுத்தும் நாளும்  மிக அருகில் தான் உள்ளது. எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் பைகளைச் சுமந்து கொண்டு தான் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள். இது வெறும் கற்பனையோ, நகைச்சுவையோ அல்ல. விரைவில் நடைபெற இருக்கும் அவலம்.
நாகரிகம் வளர வளர, மனிதன் தான் அறிவாளியாய் மேன்மையடைவதாய் எண்ணிக்கொண்டு  இயற்கையை அழித்து புதுமையைப் புகுத்தி செயற்கை இயற்கையை உருவாக்கத் தொடங்கினான். மரங்களை அழிக்கத் தொடங்கினான். விளவு மழை நின்று போனது. விவசாயம் படுத்து விட்டது. வறுமை தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ளது. இன்று நம்மைச் சுற்றி விண்ணை முட்டும் கட்டிடங்களும், விதவிதமான டெபிட், கிரெடிட் கார்டுகளில் பணமும் ஏராளமாக உள்ளன. ஆனால், விவசாய நிலமும், நிலத்தடி நீரும், பருவ மழையும் சீரழிந்து மனிதனுக்கு நித்தம் எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டே இருக்கிறது.
மனிதன் இயற்கையைச் சீண்ட சீண்ட, இயற்கை சீற்றம் காணத் தொடங்கியுள்ளது. பூமியின் சீற்றம் நிலநடுக்கம் மற்றும் பூகம்பமாய், காற்றின் சீற்றம் சுழற்றிப் போடும் புயல் காற்றாக, நீரின் கோபம் சுனாமியாய், நெருப்பின் கோபம் பெரும் தீ விபத்துக்களாய், ஆகாயத்தின்  கோபம் ஓசோனில் ஓட்டை விழுந்து பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
இயற்கையை அழிப்பதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ஒட்டு மொத்தமாக அழிப்பது, இரண்டாவது Slow Poison கொடுப்பதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கச் செய்வது.
      இயற்கையை இயற்கையாக இருக்க விடாமல் செயற்கை முலாம் பூசி அதன் வீரியத்தைக் குறைப்பதை இரண்டாம் பிரிவில் கொண்டு வரலாம். இதற்கு உதாரணத்துக்கு செயற்கை உரம் போட்டு உணவு தானியங்களை விளைவிப்பது, செயற்கையாய் பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் கலர் ஏற்றிப் பழுக்கச் செய்வது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாய் ஓசோனில் ஓட்டைப் போடுவது இவற்றைச் சொல்லலாம்.
      Plots போட்டு Flats கட்டுவதற்காக நிழல் தரும் மரங்களை மனசாட்சியே இல்லாமல் வெட்டிச் சாய்ப்பது, மோட்டர் போர் போட்டு நிலத்தடி நீரை ஒட்டு மொத்தமாக உறுஞ்சுவது இவற்றை இயற்கையை ஒட்டு மொத்தமாக அழிக்கின்ற முதல் பிரிவின் கீழ் கொண்டு வரலாம்.
ஒட்டு மொத்தத்தில் சுற்றுச் சூழல் மாசடைந்து, பூமியின் வெப்பம் அதிகரித்து, மழை நின்று போய், மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜன் குறைந்து போய், உணவை விளைவிக்கும் நிலம் சத்தற்ற வெறும் மண்ணாய் வரட்சியான பூமியில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இனி வரும் சந்ததியினருக்கு, பலவீனப்பட்ட பஞ்சபூதங்களைத் தான் நாம் சேர்த்து வைத்துள்ளோம்.
பணபலம் இருக்கிறது, அரசியல் தலைவர்களின் தொடர்பு உள்ளது, பெரும் ஆள் பலமும் இருக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்தி அனுமதிக்கப்படாத செயல்களுக்கு, காகிதத்தில் கையெழுத்திட்டு, சீல் வைத்து அப்ரூவல் வாங்கி கர்வமாய் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பெருமிதம் கொள்ளலாம். ஆனால் அந்த கர்வமும், பெருமிதமும் மனிதனின் மனதில் ஆழப் பதிவதற்குள், இயற்கை பாடத்தைச் சொல்லிக் கொடுத்து விட்டு சென்று கொண்டே இருப்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் இயற்கை மனிதனுக்கு சின்னச் சின்ன நில அதிர்வுகள் மூலமும், பொங்கும் வெள்ளம், சீறும் புயல் என்று ஏதேனும் ஒரு வகையில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறது.

மனிதன் தான் விழித்துக் கொள்ள வேண்டும். தூங்குபவர்களை எழுப்பி விடலாம். தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது முன்னோர் சொல்லி விட்டுச் சென்ற வாக்கு. மனிதன் தூங்குகிறானா அல்லது தூங்குவதைப் போல நடிக்கிறானா?

Wednesday 16 July 2014

பிரச்சனைகளும், மன அமைதியும்!


      பொதுவாக பிரச்சனைகள் நம்மை நெருக்கும் போது தான், நாம் மன அமைதியை இழப்போம். அந்தப் பிரச்சனைகள், பணப் பிரச்சனையாக இருக்கலாம், அலுவலகத்தில் வேலை பளுவினால் உண்டாகலாம், கடன் தொல்லையால் ஏற்படலாம், மதிப்பெண் குறைந்ததினால் பாதிக்கப்படலாம் அல்லது நாம் விரும்புகின்ற நிகழ்ச்சி நடைபெறாமல், அதற்கான சூழல் உண்டாகாததால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தினால் மனம் அமைதி கெட்டுப் போகலாம்.
      பிரச்சனைகள் தீர்வது அல்லது தீர்த்துக் கொள்ள முயற்சிப்பது என்பது ஒரு பக்கம் இருக்க, பிரச்சனைகள் உண்டாகும் நேரத்தில் மன அமைதியை இழக்காமல் இருப்பது தான் மிகவும் முக்கியம். மன அமைதி இல்லாத நேரத்தில் குழப்பங்களும், போராட்டங்களும்தான் மனதில் குடியேறி இருக்கும். அப்போது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை சிந்திக்க இயலாது. அப்படியே சிந்தித்தாலும் எதிமறையான முடிவுகளை தான் எடுக்க முடியும்.
இதன் காரணமாய் தான் இன்று, மதிப்பெண் குறைந்ததினால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகள், உடல் உபாதைகளினால் தற்கொலை செய்து கொள்பவர்கள், கடன் தொல்லையினால் போராட இயலாமல் தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் என்று பல்வேறு பிரிவுகளில் மன அழுத்தத்திற்கு ஆளானோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
மன அமைதியைப் பெறுவதற்கு பெரிய முயற்சிகள் எதையும் எடுக்க வேண்டியதில்லை. மனதை அப்படியே விட்டு விட்டாலே அது தானாக அமைதியாகி விடும். பிறகு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை ஆராய்ந்து அதிலிருந்து மீளலாம். 
ஒருமுறை  புத்தர்  தன்னுடைய சீடர்களுடன் காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும், அங்கிருந்த ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க நினைத்து அனைவரும் தங்கினார்கள். அருமையான நிழல் தரும் மரம். அருகில் ஒரு ஏரி. அப்போது, புத்தர்  தன்னுடைய  சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.
சீடரும் பானை ஒன்றை எடுத்துக்கொண்டு ஏரியை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், ஒரு மாட்டு வண்டி அந்த  ஏரிக்குள் இறங்கி  கடந்து சென்றது. மாடும், வண்டியும் கடந்து சென்றதால் ஏரி சேறும் சகதியுமாக கலங்கி விட்டது. 
 சகதியாக மாறிய தண்ணீரை எடுத்து வராமல் திரும்பிய சீடர் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
கால் மணி நேரத்துக்குப் பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.
ஏரியின் அருகே சென்று சீடன் பார்த்தார். இப்போதும் நீர் கலங்கியே இருந்தது. மீண்டும் சீடர் தண்ணீர் இல்லாமலேயே திரும்பி விட்டார்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.  
இந்த முறை சீடர் ஏரிக்குச் சென்று பார்த்த போது நீர் தெளிந்திருந்ததுபானையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு புத்தரிடம் திரும்பினார்.
புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் கேட்டார்: ‘தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்?’
‘நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!’ என்று சீடன் பதிலுரைத்தார்.
புத்தர் மேலும் தொடர்ந்தார்…
 ‘நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த சுத்தமான நீரும் கிடைத்தது இல்லையா?
நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும்.
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி யோசிக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! It is an effortless process!
      புத்தரின் இந்த விளக்கம், நித்தம் பல்வேறு பிரச்சனைகளினால் மன அமைதியின்றி தவிக்கும் நமக்கு ஒரு தீர்வைக் கொடுப்பதுபோல இருக்கிறதல்லவா?

நாம் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளினால் குழம்பித் தவிக்கும் மனதை அமைதிப்படுத்துவதற்கான  வழியைத் தான் புத்தர் சொல்லியிருக்கிறார். மற்றபடி நம் பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கு நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். அந்த முயற்சியை தெளிவான மனதுடன் இருக்கும் போது எடுத்தால் நேர்மறையான ரிசல்ட் கிடைக்கும் என்பது உறுதி. வெற்றி உறுதி.