Wednesday 28 May 2014

அன்பான வாசகிகளுக்கு... 
வணக்கம். விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருக்கும் மே மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் பயிலரங்கம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக அவர்களுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். ஹாபியே வேலையானால் என்ற தலைப்பில் பேசினேன். அதன் சாராம்சத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
காம்கேர் புவனேஸ்வரி

      திறமை என்றால் என்ன? நாம் தினமும் எத்தனையோ வேலைகளை செய்கிறோம்... விளையாடுகிறோம்... பாடப் புத்தகங்களை படிக்கின்றோம்... நோட்டுப் புத்தகங்களில் எழுதுகின்றோம்,  பாடங்களுக்குத் தேவையான படங்களை வரைகின்றோம். இப்படி பலதரப்பட்ட வேலைகளில், நமக்கு எந்த வேலையை செய்யும் போது மனதுக்கு பிடித்திருக்கிறதோ, நம் மனம்  திருப்தி அடைகிறதோ, சந்தோஷம் உண்டாகிறதோ அந்த வேலை தான் நம் திறமை.
      டிவி பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்பதற்காக, டிவி பார்ப்பதை நம் திறமை என்று சொல்ல முடியாது. அது ஒரு பொழுதுபோக்கு. படிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது, போர் அடிக்கிறது என்பதற்காக, படிக்கும் திறமை நமக்கு இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏன் என்றால் படிப்பது என்பது நம் கடமை. அது திறமை அல்ல.
      இவற்றை எல்லாம் தாண்டி நமக்குள் நமக்கே நமக்காக பொதிந்து கிடக்கும் சக்தி தான் நம் திறமை. நமக்குள் இருக்கின்ற திறமையை வெளிக் கொண்டு வருவதே ஒரு திறமை தான்.
      படம் வரைதல், கதை-கவிதை-கட்டுரை எழுதுதல், பாட்டுப் பாடுதல், தோட்டம் அமைத்தல், வளர்ப்புப் பிராணிகளைப் பராமரித்தல் இப்படி ஒவ்வொருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதை என்ன என்று கண்டுபிடித்து விட்டால், அத்திறமையை மெருகேற்றிக் கொள்வது தான் அடுத்த வேலை.
      முதலில் ஒரு நோட்டு ஒன்றை தயார் செய்ய வேண்டும். படம் வரையத் தெரிந்தவர்கள் தினமும் அதில் தேதி போட்டு படம் வரைந்து கொண்டே வரலாம். எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள்  அனுபவங்களை அதில் கதையாக எழுதி வரலாம். அதை நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் காண்பித்து அவர்கள் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு திறமையை மெருகேற்றிக் கொண்டே வர வேண்டும். அண்மையில் உருவாக்கிய படைப்புகளை, சில மாதங்களுக்கு முந்தைய படைப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மாற்றத்தை நீங்களே உணர முடியும். அண்மை படைப்புகள் அழகாக மெருகேறி இருப்பதைக் காணலாம். ஆக, உங்கள் திறமையை கண்டுபிடித்து, தொடர் பயிற்சி  செய்து, மெருகேற்றிக் கொண்டே வர வேண்டும்.
      இப்படி செய்து வந்தால் உங்கள் படிப்போடு சேர்ந்து, உங்கள் திறமையும் வளர்ந்து வரும். இரட்டைப் பட்டங்கள் பெறுவதற்கு ஒப்பாகும் இச்செயல்.  
      அடிப்படையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு விட்டால், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் மூலமும், உங்கள் கல்வி மூலமும் அவற்றை இந்த உலகம் அறிய வைக்கலாம். பணமும் சம்பாதிக்க முடியும்.
      15-20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது, படம் வரைவது, பரத நாட்டியம் ஆடுவது .... இது போன்ற திறமைகள் எல்லாம் ஹாபியாக மட்டுமே செய்கின்ற வேலையாக இருந்து வந்தன. ஆனால் இன்றோ இது போன்ற திறமைகள் இருப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு. திறமை சார்ந்த பணிகளுக்கான வாய்ப்புகள் சாஃப்ட்வேர் துறை, பிரிண்ட்டிங் மீடியா, தொலைக்காட்சி மீடியா, மல்டிமீடியா துறை என பல்வேறு துறைகளில் குவிந்து கிடக்கின்றன.
      எத்தனையோ மாணவ மாணவிகள் கம்ப்யூட்டரில் பி.ஈ, எம்.ஸி.ஏ, எம்.எஸ்.ஸி என்று பட்டங்கள் பெற்றிருந்தும் வேலை கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? அவர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள்  திறமையை முழுமையாக பட்டைத் தீட்டாமல் விட்டவர்கள்.
      இன்றைய நவீன கம்ப்யூட்டர், இண்டர்நெட்  யுகத்தில் கம்ப்யூட்டரையும், புத்தகப் படிப்பையும் தவிர எழுதும் திறமை, பாடும் திறமை, படம் வரையும் திறமை என்று பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
      இது போன்ற வேலைக்கு இன்று ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் . ஆனால் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏன்? நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இன்று மாணவர்களுக்கு கம்ப்யூட்டரும், அது சார்ந்த படிப்பும் நன்கு தெரிகிறது...ஆனால் அடிப்படைத் திறமையில் முழுமை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
      கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களைக் கற்றுக் கொள்ள ஓரிரு மாதங்கள் தான் ஆகும்...ஆனால் திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ள வருடங்கள் ஆகும். எனவே நீங்கள் அனைவரும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை கற்கும் நேரங்களில் உங்கள் திறமை உங்கள் வாழ்க்கைக்கு கை கொடுக்கும்.
      ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், கணக்கைக் கற்றுக் கொடுக்கலாம், ஆங்கிலத்தைச் சொல்லித் தரலாம். ஆனால், திறமையை சொல்லித் தர இயலாது, நீங்களே கண்டு கொண்டு வளர்த்து செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
      எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வெப்சைட், பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா என மீடியாக்களுக்கு எழுதுவதே பணியாக அமைந்தால்… படம் வரைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு படம் வரைந்து அனிமேஷன் செய்வதே பணியாக அமைந்தால்… பாட்டுப் பாடுபவர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பதே வேலையாக அமைந்தால்…எண்ணிப் பாருங்கள் அந்த வாழ்க்கையை?
      இப்படி ஹாபியே வேலையாக மாறினால் எப்படி இருக்கும்? எவ்வளவு ரம்மியமாக இருக்கும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையைப் பெறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது.
      இந்த இடத்தில் பெற்றோர்களுக்கும் ஒரு கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
      வாழ்க்கையில் வெற்றியின் அதிகபட்ச உயரத்தை அடைந்தவர்கள் அனைவருமே, தங்கள் பலம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதைத் தங்கள் பணிகளில் இணைத்துக் கொண்டவர்கள். தங்கள் பலவீனத்தைக் குறைக்கப் பயிற்சி எடுப்பதை விட பலத்தைப் பெருக்க முயிற்சி எடுத்தவர்கள்.
      உங்கள் குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள். அவர்களிடம் படிப்பைத் தாண்டி என்ன திறமை இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். கல்வியோடு சேர்த்து அதையும் வளர்க்க ஊக்கப்படுத்துங்கள்.
      உங்கள் பிள்ளைக்கு கணக்கு வரவில்லையா? கவலை வேண்டாம். கவிதை வருகிறதா? எழுதட்டும். விட்டு விடுங்கள். கொஞ்சம் கவிதை. கொஞ்சம் கணக்கு என்று ஆசை காட்டி பயிற்சி கொடுங்கள். ஆனால் கவிதைக்கு முழுக்குப் போடு என்று சொல்லி பிள்ளையின் ஊக்க சக்தியை விஷம் வைத்து அழித்து விடாதீர்கள்.
      அதிக ஈடுபாடு இல்லாத சப்ஜெக்ட்டை, அதிகபட்சமாக எவ்வளவு சொல்லிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சொல்லிக் கொடுத்து அதில் தேர்ச்சி பெறச் செய்யுங்கள். ஆனால் எந்த சப்ஜெக்ட் பிடித்திருக்கிறது என்பதை கண்டு கொள்ள தவறாதீர்கள். அதில் என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கிறது என்று கண்டறிந்து அதை நோக்கியப் பயணத்துக்குத் தயாரா(க்)குங்கள். வராத சப்ஜெக்ட்டில் முதல் மதிப்பெண் எடுக்க வைக்கின்ற நோக்கத்தில், பிடித்த சப்ஜெக்ட்டில் கோட்டை விடச் செய்து விடாதீர்கள்.
      அதைத்தான் முன்பு சொன்னேன், பலவீனத்தைக் குறைக்கும் முயற்சியில், பலத்தைப் பெருக்கத் தவற விட்டு விடாதீர்கள். 
      ஒரு குட்டிக் கதை…
ஓர் அடர்ந்த காட்டில் உள்ள ஒரு மரத்தின் அடியில் யானை, நாய், குரங்கு, கோழி, காக்கா, எறும்பு, பல்லி இவை கூடியிருந்தன. அருகே ஒரு குளம். அதிலுள்ள மீன் ஒன்றும் அவர்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தது.
அப்போது சிங்கம் ஒன்று கம்பீரமாக நடந்து வந்து ஒரு மேட்டில் அமர்ந்தது. அது தான் அந்தக் கூட்டத்துக்கு தலைவர். அது எதிரே கூடியிருந்த மிருகங்களுக்கு ஒரு போட்டி ஒன்றை அறிவித்தது. 
‘உங்கள் தலைக்கு மேல் இருக்கும் மரத்தில் இருக்கின்ற ஒரு கிளையை யார் முதலில் பிடித்துத் தொங்குகிறார்களோ அவருக்கு எனக்கு உதவியாளனாக இருக்கும் பதவியை அளிக்க இருக்கிறேன்.’
இந்தப் போட்டி எவ்வளவு முட்டாள்தனமானது? ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன என பல்வேறு வகையான மிருகங்களுக்கும் சேர்த்து ஒரே போட்டி என்றால் அது எப்படி சாத்தியமாகும். முயன்றால் முடியாததில்லை தான். ஆனால், எத்தனை முயன்றாலும் மீனால் மரக்கிளையைப் பிடிக்க முடியுமா? முடியாதல்லவா? தண்ணீரை விட்டு வெளியே வந்தால் இறந்து விடாதா?
      இந்தப் போட்டியை முட்டாள்தனமானப் போட்டி என்று கருதும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிடாமல், அவரவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். இப்போதெல்லாம் டியூயல் டிகிரி என்பது பெருகி வருகிறது. ஒரு டிகிரிக்காக படிக்கும் போதே மற்றொரு கோர்ஸிலும் சேர்ந்து பட்டம் பெற முடியும். வாழ்க்கைக்காக ஒன்று, ஆர்வத்துக்காக மற்றொன்று என இரட்டைப் பட்டங்கள் பெற இன்றைய கல்விச் சூழலில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். எனவே, படித்த படிப்பிற்கான வேலையா? பிடித்த திறமைக்கான வேலையா? என்ற கேள்விக்கு இரண்டுக்குமே பாசிடிவான பதிலைச் சொல்லும் அளவுக்கு இன்று வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
      உங்கள் பிள்ளையும், அடுத்த வீட்டுப் பிள்ளையும் ஒரே வயதாக இருக்கலாம், ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் கூட படிக்கலாம். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு மனதை பெற்றவர்கள். வித்தியாசமான திறமைகளைக் கொண்டவர்கள். வேறுபட்ட விருப்பு வெறுப்புகளை உள்ளுக்குள் சுமப்பவர்கள்.

      உங்கள் பிள்ளைகள்  களிமண்ணல்ல… அவர்களை வைத்து ஒரே மாதிரியான பொம்மைகளைச் செய்ய… எனவே பெற்றோர்களே யோசியுங்கள்!
இப்படிக்கு அன்புடன்
காம்கேர் புவனேஸ்வரி

Wednesday 14 May 2014


அன்பார்ந்த மங்கையர் மலர் வாசகிகளே, இன்று தைரியம், வீரம், விவேகம் குறித்து உங்களுடன் பேச இருக்கிறேன். - காம்கேர் கே புவனேஸ்வரி

தைரியம் என்பது ஒரு வகை தன்னம்பிக்கையே. நாம் நம் மனதை தைரியம் என்ற உணர்வால் கட்டிப் போட்டு வைத்திருக்க வேண்டும். நாம் செய்கின்ற செயல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவைப் பெற்று வைத்திருந்தாலே தைரியம் தானாகவே நம்மைத் தொற்றிக் கொள்வது சர்வ நிச்சயம்.

தைரியம் என்பது ஓர் உணர்வு. வீரம் என்பது வெளிப்பாடு. விவேகம் என்பது வீரத்தை வெளிப்படுத்தும் நுணுக்கம்.

மனதில் இருக்கும் தைரியத்தை, விவேகத்துடன் இணைத்து செயல்படுத்தும் போது தான் உண்மையான வீரம் வெளிப்படும். மாறாக, இடம், பொருள், சூழல் அறியாமல் காட்டப்படும் வீரம் செயலிழந்து போய்விடும்.

உதாரணத்துக்கு தெரு விளக்குகளும், ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் கும்மிருட்டில் இரவு 12 மணிக்கு நடந்து வருவது என்பது தைரியம் அல்ல. அசட்டு தைரியம். ஏன் என்றால், அந்நேரத்தில் வழக்கமாக பழக்கப்பட்ட நம் தெரு நாய்கள் கூட நம்மை பார்த்துக் குரைப்பதையும், பைக்கின் சப்தத்துக்கு மிரண்டு பைக்கின் வேகத்துக்கு ஏற்ப, பாய்ந்து வருவதையும் நம்மில் பலர் அனுபவித்திருப்போம்.

நிலநடுக்கம் வரும் நேரங்களில் எப்படி பாதுகாப்பாய் இருப்பது என்று பயிற்சி கொடுக்கிறார்களே? அது எதற்கு நிலத்துக்கு பயந்தா?

சுற்றலாத் தளங்களில் படகில் செல்லும் போது உயிர்காக்கும் சாதனங்களை எடுத்துச் செல்வது தண்ணீருக்கு பயந்தா?

ஒவ்வொரு அலுவலகத்திலும், பெரிய பெரிய வளாகங்களிலும் தீயணைப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளதே அது எதற்காக? நெருப்புக்கு பயந்தா?

புயல் வீசும் காலங்களில் வீடுகளில் அடைந்து கிடக்கிறோம்…கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அவை எதற்கு? காற்றுக்கு பயந்தா?

விமானத்தில் செல்லும் போது பாராசூட் பற்றி சொல்லி ஆபத்து சமயத்தில் பயன்படுத்த அறிவுறுத்துகிறார்களே? அது எதற்காக ஆகாயத்துக்கு பயந்தா?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை அனைத்தும் இயல்பாய் இருக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக சீற்றம் அடையும் போது அவை விளைவிக்கும் ஊறுகள் கணக்கிலடங்கா. எனவே அவற்றின் சீற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் பல வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். அவ்வளவு தான். அதற்காக ஐம்பூதங்கள் மீது நமக்கு பயம் என்று பொருள் அல்ல. நாம் கோழைகள் என்றும் அர்த்தமல்ல.

புயல் அடிக்கும் போது நான் படகில் செல்வேன் என்று சொல்வதும், தீப்பிடிக்கும் என்று தெரிந்தும் தீக்குச்சியை பற்ற வைத்து நம் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்வதும் வீரம் என்று நம்மில் யாராலாவது சொல்ல முடியுமா?

தண்ணீரில் படகில் செல்வதும், தீக்குச்சியை ஸ்டைலாக உரசி பற்ற வைப்பதும் வீரம் என்றால், சரியான சீதோஷண நிலை இருக்கும் போது படகில் செல்வதும், தீக்குச்சியை தேவைக்காக தேவையான போது பயன்படுத்துவதும் தான் விவேகம். தண்ணீர், சீதோஷண நிலை, படகு, தீக்குச்சி, தேவைகள் இவற்றைப் பற்றிய தெளிவைப் பெற்றிருப்பது தான் தைரியம்.

வீரத்தும், விவேகத்துமான தொடர்பை உணர்த்தும் ஒரு கதை…

கோவில் யானை ஒன்று சுத்தமாக, நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு, குரங்கு, பூனை, எருமை என்று அதன் நண்பர்களுடன் பேசிக் கொண்டே, ஓர் ஒடுக்கமான பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தது. யானை முன்னே வர மற்றவை பின் தொடர்ந்தன.

சற்று தூரத்தில், சேற்றில் புரண்டு விட்டு இரண்டு பன்றிகள், வாலை ஆட்டிக் கொண்டே வந்து கொண்டிருந்தன.

அதை கவனித்து விட்ட யானை ஓர்  ஓரத்தில் ஒதுங்கி நின்று விட்டது. உடனே பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அதன் நண்பர்களும் அமைதியாய் ஒதுங்கி வழி விட்டு நின்றன.

அந்த பன்றிகள் இரண்டும் யானையைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டன. அதோடு விட்டனவா? ஒரு பன்றி மற்றொன்றிடம், ‘பார்த்தாயா, அந்த யானை நம்மைக் கண்டு பயந்து விட்டது!’ என்று சொல்லி எகத்தாளமாய் சிரித்தது. மேலும் வாலை வேக வேகமாக ஆட்டிக் கொண்டே பாலத்தைக் கடந்து சென்றன.

அது வரை அமைதியாக இருந்த யானையின் நண்பர்கள் யானையைப் பார்த்து, ‘அந்தப் பன்றி சொன்னதைப் போல நீ பயந்து போய் தான் வழிவிட்டு ஒதுங்கி நின்றாயா?’ என்று கேட்டன.

அதற்குக் கோவில் யானை பொறுமையாக சொன்னது:

‘இல்லை நண்பர்களே! இந்தக் குறுகலான பாதையில், அந்த பன்றிகளுக்குப் போட்டியாக அவற்றை எதிர்த்து நான் சென்று கொண்டிருந்தால், என் காலில் அவை இடறி நசுங்கி விட வாய்ப்புண்டு. மேலும் நான் குளித்து விட்டு படு சுத்தமாக இருக்கிறேன். பன்றிகளோ சேற்றில் புரண்டு சகதியை உடல் முழுவதும் பூசிக் கொண்டு நாற்றத்துடன் வந்து கொண்டிருந்தன.  என் காலில் அவை இடறும் போது, சேறும், சகதியும் என் உடல் மேல் பட்டு, சுத்தமான என் உடலை அசுத்தமாக்கி விடுமல்லவா?

மேலும், நான் நினைத்திருந்தால் ஒரு பிளிரலில் அவற்றை மிரள வைத்திருக்கலாம். அப்படி அவை மிரண்டு பயந்து ஓடும் போது அவற்றின் உடலில் ஒட்டியிருக்கும் அசுத்தங்கள் என் மீது பட்டு என்னையும் நாற்றமெடுக்கச் செய்து விடும். அதை நான் விரும்பவில்லை. எனவே தான் ஒதுங்கி வழி விட்டேன்’.

இந்தக் கோவில் யானையிடம் தைரியம், வீரம், விவேகம் இவை மூன்றும் சரிவிகிதத்தில் இருப்பதை உணர முடிந்தவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள். எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது.

இப்படிக்கு அன்புடன்
காம்கேர் புவனேஸ்வரி

Thursday 8 May 2014

இன்று, +2  ரிசல்ட்.
 மாணவ, மாணவிகளுக்காக... மங்கையர் மலர் 
மே 1-15, 2014  இதழில் வெளியான கட்டுரை
காம்கேர் கே புவனேஸ்வரி



நம்பிக்கை... நெஞ்சில் வை...
(உண்மை நிகழ்வின் அடிப்படையிலான கட்டுரை)

இன்று +2 ரிசல்ட். நான் வசிக்கின்ற அப்பார்ட்மெண்ட்டில் உள்ள பிள்ளைகள் பரபரப்பாக தங்கள் மொபைலிலும், கம்ப்யூட்டரிலும் ரிசல்ட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் தெருவில் இருக்கும் பிரவுசிங் செண்டரில் சீசனல் பிசினஸாக ரிசல்ட் பார்த்துச் சொல்லும் பிசினஸ் பிசியாக நடந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு குழந்தையின் முகத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். யாருக்குமே முழு திருப்தி இல்லை. 1200 க்கு 1100 மதிப்பெண் எடுத்த பிள்ளைகளுக்கும் வாடிய முகம் தான். 1200 க்கு 700 மதிப்பெண் எடுத்த பிள்ளைகளுக்கும் வாடிய முகம் தான். தேர்வில் ஃபெயிலான பிள்ளைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையே முடிந்து விட்டதைப் போல துக்கம். அவமானம். தலை நிமிராமல் வீட்டு அறைக்குள் முடங்கிப் போயினர். தோல்வி அடைந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்களும், மூக்கு நுனியும் சிவக்க அழுது புலம்பி திட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தெரியாமல் குமுறிக் கொண்டிருந்தனர்.

குறைந்த மதிப்பெண், தேர்வில் தோல்வி, கிடைத்த கோர்ஸ் கிடைக்கவில்லை – இப்படி தோல்வி எந்த வடிவத்தில் உங்களை வந்தடைந்திருந்தாலும் அதுபற்றி நீங்கள் கவலைப் படுங்கள், அழுங்கள். சோகமாய் இருங்கள். இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட இருங்கள். ஆனால் எந்தத் தவறான முடிவையும் எடுக்காதீர்கள்.


என் வாழ்வில் நான் சந்தித்த ஒரு நபரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் முடிவெடுங்கள் - நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று.

2008-ஆம் ஆண்டு. இன்லண்ட் லெட்டர் ஒன்று எனக்கு வந்திருந்தது.
----------------------------------------------------------------------------------
‘அன்புடையீர் அம்மா அவர்களுக்கு,
எனது பணிவன்பான இனிய நமஸ்காரங்கள். தாங்கள் நடத்தி வரும் மென்பொருள் நிறுவனத்தையும், தங்களால் தமிழில் எழுதப்பட்டு வரும் நூல்களையும் கேள்விப்பட்டுள்ளேன். பத்திரிகைகளில் தாங்கள் எழுதி வரும் கம்ப்யூட்டர் தொடர்களையும், தன்னம்பிக்கைக் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.
கடந்த மூன்று வருடங்களாக கணினி அடிப்படைகளைக் கற்றுக் கொண்டு வருகிறேன். அத்துடன் தொலைதூரக் கல்வியில் B.Sc., பட்டப் படிப்பையும் படித்து வருகின்றேன். எனக்கு தற்போது C, C++, Java போன்ற கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளது.
எனக்கு அம்மா அவர்கள் Java, C, C++ போன்ற நூல்களை இலவசமாக தந்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த உதவியை தாங்கள் செய்து கொடுப்பீர்கள் என்று அன்புடன் எதிர்பார்க்கிறேன்.
இவண்
தங்கள் உண்மையுள்ள,
ரமேஷ்
----------------------------------------------------------------------------------
இவருக்கு என்ன குறைச்சல்…கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். அத்துடன் கம்ப்யூட்டரில் பயிற்சியும் எடுத்து வருகிறார். நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.

கொஞ்சம் பொறுங்கள். கடிதத்தின் அடுத்த பக்கத்தில் உள்ள வாசகங்களையும் படியுங்கள்.
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:

‘அம்மா, என் வயது 35. நான் சிறைச்சாலையில் கடந்த 10 வருடங்களாக தண்டனைக் கைதியாக இருக்கிறேன்’
----------------------------------------------------------------------------------
இப்படி எழுதி சிறைச்சாலையின் அவருடைய கைதி எண்ணைக் குறிப்பிட்டு, சிறை அலுவலரிடம் கையெழுத்து வாங்கி, சீல் வைத்திருந்தார். சிறைச்சாலையின் முகவரியைக் குறிப்பிட்டு அம்முகவரிக்கு புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தார்.
ஏதோ சந்தர்ப்ப வசத்தால் சிறைக்குச் சென்ற அந்த இளைஞர் நம்பிக்கையை இழக்காமல் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்துள்ளார். நம்பிக்கை உள்ள மனிதர்களுக்கு அவர்கள் விரும்பும் சூழல் தானாகவே அமையப்பெறும் என்பதற்கு இதைவிட என்ன உதாரணத்தைக் காட்ட முடியும்.

அவரது தன்னம்பிக்கைக் கொடுத்த ஆர்வம், அவரைப் படிக்கத் தூண்டியது. ஏதோ ஒருநிறுவனம் கைதிகளுக்கு சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க, அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்த, அந்நிறுவனமே அவருக்கு எல்லா கம்ப்யூட்டர் மொழிகளையும் கற்றுக் கொடுத்தது.

அவரது நம்பிக்கை கொடுத்த தைரியம், எனக்குக் கடிதம் எழுத வைத்தது. நானும் புத்தகங்களை அனுப்பி வைத்தேன்.
அவரது நம்பிக்கைக் கொடுத்த சக்தி, அவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் முன்பே நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆம். அவருக்குக் கம்ப்யூட்டர் பயிற்சி அளித்த நிறுவனமே அவருக்கான ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்தது.

இந்தக் கதையை எல்லாம் நான் சிறைச்சாலை அலுவலர்களிடம் தொலைபேசியில் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
25 வயதில் ஜெயிலுக்குச் சென்ற இவராலேயே முடியும் போது உங்களால் முடியாதா?
----------------------------------------------------------------------------------
“தோல்வி எந்த வடிவத்தில் உங்களை வந்தடைந்திருந்தாலும் அது குறித்து நீங்கள்...

• கவலைப் படுங்கள்
• சோகமாய் இருங்கள், அழுங்கள்
• இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட இருங்கள்

ஆனால் எந்தத் தவறான முடிவையும் எடுக்காதீர்கள்”
இவை மாணவர்களுக்கு மட்டும் அல்ல. நம் ஒவ்வொருவருக்கும் தான்.

----------------------------------------------------------------------------------
இப்படிக்கு அன்புடன்,
காம்கேர் கே புவனேஸ்வரி