Wednesday 27 August 2014

கணிப்புகள்

கணிப்புகள்
காம்கேர் கே புவனேஸ்வரி
   பொதுவாகவே நம் ஒவ்வொருவருக்கும், மற்றவர்களைப் பற்றிய கணிப்புகள் சிறிதளவாவது இருக்கும். அதை வைத்துக் கொண்டு தான் அவர்களை சந்திப்பதற்கு முன்பே அவர்களைப் பற்றிய அபிர்ப்பிராயங்களை வைத்துக் கொண்டு பேசுவோம், பழகுவோம். கேட்டில் நின்று கொண்டு வீட்டைக் நிற்கும் செக்யூரிடிகளில் இருந்து நாட்டைக் காக்கும் அரசியல்வாதிகள் வரை நமக்குள் அவர்களைப் பற்றிய கணிப்புகள் இருக்கும். அப்படி இருப்பதை சரி என்றோ, தவறு என்றோ சொல்லி விட முடியாது. கணிப்புகளும், முன் அனுமானங்களும் நமக்கு எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுமே தவிர, அவை மற்றவர்களுடன் செய்ய வேண்டிய பணிகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடக் கூடாது.
      உதாரணத்துக்கு, மாமியார்-மருமகள் உறவையே எடுத்துக் கொள்ளலாம். சொல்லலாம். திருமணம் என்றாலே ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தன் திருமணக் கனவை விட, மாமியார் பற்றிய கவலைகளே அதிகம் இருக்கும். அதுபோல மாமியாருக்கு வீட்டிற்கு வர இருக்கும் மருமகள் பற்றிய பயம் அடிமனதில் ஓடத் தொடங்கி விடும். காரணம் என்ன? மாமியார் என்றால் கொடுமைப்படுத்துகிறவர், மருமகள் என்றால் தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்துச் செல்ல வர இருக்கும் பெண் – இவை தான் மீடியாக்கள் குறிப்பாக தமிழ் சினிமாக்கள் அடையாளப்படுத்தியிருக்கும் பிம்பம். எனவே மாமியார் தன் மருமகளைப் பற்றியும், மருமகள் தன் மாமியாரைப் பற்றிய வைத்திருக்கும் இத்தகைய தவறான கணிப்புகளினால், அவர்கள் பரஸ்பரம் நல்லவர்களாகவே இருந்தாலும் பழகும் போது இறுக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
      சமீபத்தில், ஒரு நாள் மாலை 5 மணி அளவில் அவசரமாக தி.நகர் வரை செல்ல வேண்டியிருந்தது. என்னை கடந்து சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி, எவ்வளவுப்பா? என்று கேட்டேன். ஆட்டோ ஓட்டுனர்,  ‘மீட்டர் போடுகிறேன்’ என்றார் மிகவும் சாத்வீகமாக. எனக்குள் பளிச்சென்று அவர்மீது மரியாதைத் தோன்றியது.
ஆட்டோவை கார் போல வெகு நளினமாக ஓட்டிச் சென்றார். ஒடித்து நொடித்து, இடித்து விடுவது போல வெகு அருகில் சென்று அடுத்தவர்களை பயம் காட்டி விர்ரென்று செல்லும் ஆட்டோக்களையே பார்த்துப் பழகி இருந்த எனக்கு இவ்வளவு அழகாக ஆட்டோவை ஓட்டிச் சென்று கொண்டிருந்த ஓட்டுனர் மீது மரியாதை அதிகரித்துக் கொண்டே வந்தது.
எப்போதேனும் ஆட்டோவில் ஏற வேண்டிய சூழல் வந்தால், ‘கொஞ்சம் மெதுவாவே ஓட்டுங்க…அவசரமில்லை’ என்று ஒரு பாதுகாப்புக்காகச் சொல்லி வைப்பது வழக்கம். ஆனால் நான் சொல்வதை எந்த ஓட்டுனரும் கேட்டதில்லை. இந்த முறை நான் எதுவுமே சொல்லாமலேயே ஓட்டுனர் அழகாக வண்டியை ஓட்டிக் செல்கிறாரே என்ற வியப்பில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன்.
ஓட்டுனர் வண்டியில் நான் ஏறி அமர்ந்ததில் இருந்து கொஞ்சம் அநீசையாகவே இருந்தார். அடிக்கடி சீட்டுக்குப் பின் இருந்த ஒரு புத்தகத்தை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். பிறகு அதை எடுத்து முன்பக்கம் வைத்துக் கொண்டார்.
அது என்ன புத்தகமாக இருக்கும். ஏன் இப்படி தடுமாறுகிறார்? ஏதேனும் தவறான புத்தகமாக இருக்குமோ, அது நம் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று இப்படி தடுமாறுகிறாரோ? என்ற ரீதியில் என் எண்ணங்கள் ஓடின.
அப்புத்தகம் வழுக்கி விழ முற்பட்ட போது அதை எடுத்து மீட்டருக்கு அருகில் இருக்கும் இடுக்கில் சொருகினார். ஆனாலும் திருப்தி இல்லாமல் அதை எடுத்து தன் சீட்டுக்குப் பின்னாலேயே வைத்துக் கொண்டு அதன்மீது தன் தோள் துண்டை எடுத்து வெயிட்டுக்கு வைத்தார்.
இதற்கு நடுவில் ஓட்டுனர் ஆட்டோவுக்கு பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பேங்கில் நிறுத்தி விட்டு அதில் கவனமானார். இதற்குள் நான் மெல்ல முன்னால் சென்று எட்டிப் பார்த்தேன். துண்டு அப்புத்தகத்தின் மீதிருந்ததால் அது என்ன புத்தகம் என்று தெரியவில்லை. சின்ன ஏமாற்றம்.
மீண்டும் ஆட்டோ பயணப்பட்டது. ஓட்டுனர் வண்டி ஓட்டுவதில் காட்டிய அக்கறையை, தன் சீட்டிற்குப் பின் வைத்திருக்கும் புத்தகத்தின் மீதும் காட்டிக் கொண்டே வந்தார். அடிக்கடி தன் கையை பின்பக்கம் வளைத்து, புத்தகம் இருக்கிறதா என்று தடவிப் பார்த்துக் கொண்டே வந்தார்.
எனக்குள் அது என்ன புத்தகமாக இருக்கும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே வந்தது.
நான் சென்றடையும் இடம் வந்ததும் மீட்டரைப் பார்த்து பணம் கொடுத்து விட்டு நகரும் முற்பட்ட போது, ஆட்டோ ஓட்டுனர் அந்தப் புத்தகத்தை எடுத்து என் கைகளில் கொடுத்து விட்டு ‘இப்புத்தகம் உங்களிடம் இருந்தால் தான் மதிப்பு…’ என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.
எனக்கு பொட்டில் அறைந்தது போல இருந்தது. காரணம்…
‘சங்கரானந்தம்!’ பெயரிடப்பட்டு, சங்கராச்சாரியார் கம்பீரமாய் உட்கார்ந்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார்.
‘இப்புத்தகம் எப்படி உங்களுக்கு…’ என்று நான் இழுக்க, காலையில் மாம்பலத்தில் ஒரு ஆன்மிக சொற்பொழிவுக்கு சவாரி சென்றேனம்மா...அங்கு இதைக் கொடுத்தார்கள்…’ என்றார் ஓட்டுனர்.
பிரமிப்பு, ஆச்சர்யம், தவறாக நினைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இப்படி பல்வேறு உணர்வுக் குவியல்கள் என்னை போட்டிப் போட்டுக் கொண்டு ஆக்கிரமித்திருத்துக் கொள்ள, அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக்கொண்டு ‘ரொம்ப அழகா பொறுமையா வண்டி ஓட்டினீங்க’ என்று பாராட்டி விட்டு நகர்ந்தேன். ஆட்டோ ஓட்டுனர் ‘நன்றிம்மா!’ என்று தன் இரு கைகளால் வணங்கியது என் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
மீட்டர் போட்டு வண்டியை ஓட்டிய நேர்மை, ஆட்டோவை கார் போல இலாவகமாக ஓட்டிச் சென்ற பொறுமை, சங்கராச்சாரியார் புகைப்படம் போடப்பட்ட புத்தகத்துக்கு அவர் கொடுத்த மரியாதை இவை எல்லாம் சேர்ந்து கொண்டு அவரது கருமையான இறுகிய முகத்துக்கு தங்க முலாம் பூசிய அழகை உண்டாக்கின என்று நான் சொல்வதை நம்ப முடிகிறதா?

ஒருவரைப் பற்றிய கணிப்புகளை வைத்துக் கொண்டு அதே கண்ணோட்டத்துடன் அணுக வேண்டிய அவசியமில்லை. பிறரைப் பற்றிய கணிப்புகள்  நமக்கு பாதுகாப்பிற்காக இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாத பயத்தை ஏற்படுத்திக் கொண்டு பட்டும்படாமலும் பழகுவதற்காக இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்தப் பதிவு.