Wednesday 20 August 2014

கசக்கும் விருந்தோம்பல்

      
காம்கேர் கே புவனேஸ்வரி
       நம் இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளில் ஒன்று விருந்தோம்பல். வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களின் உடல்நிலைக்கு ஏற்ப உணவளிக்க வேண்டும் என்பதும், பாசம், நேசம் என்கின்ற பெயரில் ஒவ்வாத உணவுப் பண்டங்களையும், இனிப்பு வகைகளையும் அளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை.  ‘
இன்னிக்கு ஒரு நாள் தானே...என்ன ஆயிடும்?’ என்று சொல்லி சொல்லியே விருந்தினர்களும், நண்பர்களும் படுத்தும் பாட்டுக்கு பெரும்பாலானோர் உடல்நிலை ஒத்துழைக்க மறுப்பது என்னவோ உண்மை.
பொதுவாகவே உடல்நிலை காரணமாக இனிப்பு வகைகளையும், எண்ணெய் பண்டங்களையும் சாப்பிட முடியாத பெரியோர்களுக்கு, அதைப் பார்க்கும் போது சாப்பிடத் தோன்றும். அதிலும் விருந்தினர்கள் வற்புறுத்திக் கொடுக்கும் போது எப்படி சாப்பிடாமல் இருக்கத் தோன்றும்?
      வெளிப் பார்ப்பதற்கு உடல்நலம் சரியில்லாதவர் போல தெரியாததால், உள்ளுக்குள் இருக்கின்ற வலியையும், வேதனையையும் மற்றவர்களுக்கு புரிய வைக்க முடிவதில்லை. அதற்காக எப்போதும் உடல்நிலை சரியில்லாதவர்களைப் போல வேஷம் போடவா முடியும்?
      மற்றவர்கள் நம் மீது அன்பால் செலுத்துகின்ற விருந்தோம்பல் நம்  அன்றாட வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கின்றது  என்பதை மகாபாரதக் கதை ஒன்று அழகாக விளக்குகிறது.
      ஒருசமயம் அஸ்தினாபுரத்தில் தர்மபுத்திரர் நிகழ்த்தும் ராஜசூய யாகத்தை ஒட்டி தினந்தோறும் அன்ன தானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்றியுள்ள எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் தினந்தோறும் அந்த யாகத்துக்கு வருகை தந்து வயிறார சாப்பிட்டுச் சென்றனர்நகுல சகாதேவர்களுக்கு யாகத்துக்கு வருபவர்களை வரவேற்கின்ற வேலை,  அர்ஜூனனுக்கு யாகசாலையை பாதுகாக்கும் பொறுப்பு, போஜனப் பிரியரான பீமனிடம் யாகத்துக்கு வருகின்றவர்களுக்கு வயிராற சாப்பாடு பரிமாறி உபசரிக்க வேண்டும் என்ற பணி  என்று தன் சகோதர்கள் அனைவருக்கும் பிரத்யேகமாக வேலைகளை பிரித்துக் கொடுத்தார் தர்மபுத்திரர்.
      ஒருசில தினங்களில் யாகத்தில் கலந்து கொண்டு உணவு உண்போர் கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. காரணம் புரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில், புல்லாங்குழலுடன் கண்ணன் அவ்விடம் வந்து சேர, தர்மபுத்திரர்  தன் சோகத்தை அவனிடம் கொட்டித் தீர்த்தார். அதற்குள் பீமன் ஒரு தட்டில் 3 டம்ளர் பாலுடன் வந்து, ஒரு டம்ளர் பாலை எடுத்து கண்ணனிடம் நீட்டி குடிக்கச் சொல்லி உபசரித்தான். கண்ணனும் ஆனந்தமாக அருந்தினான். உடனடியாக பீமன் மற்றொரு டம்ளர் பாலை கொடுத்து பருகச் சொன்னான். வயிறு நிரம்பி விட்டது. போதும் என்று கண்ணன் மறுத்தாலும், பீமன் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பாலையும் பருகினான் கண்ணன். அதற்கும் மூன்றாவது டம்ளர் பாலை கொடுத்து அருந்தச் சொல்லி பிடிவாதமாக வற்புறுத்தத்  தொடங்கினான் பீமன்.
அப்போது  பீமனுக்கு ஒரு அவசர் வேலையைச் செய்யச் சொல்லி பணிந்தான் கண்ணன். அதாவது கந்தமாதன மலைக்குச் சென்று, அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் தங்கநிற முனிவரை சந்திப்பது தான் கண்ணன் பீமனுக்கு இட்ட அந்த அவசர வேலை.
      ‘சரி... அவரிடம் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று வினவினான் பீமன்.
      ‘ஒன்றும் குறிப்பாகச் சொல்ல வேண்டாம். கண்ணன் அனுப்பினான் என்று மட்டும் சொல். ஆனால் அம்முனிவரை மிக மிக நெருக்கத்தில் பார்க்க வேண்டும் என்பது தான் முக்கியம்என்றான் கண்ணன்.
      குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்த தர்மபுத்திரரிடம் கண்ணன் சொன்னான்...உன் யாகசாலையில் உணவு உண்போர் குறைந்து போனதுக்கும், பீமனை நான் கந்தமாதன மலைக்கு அனுப்பியதற்கும் ஒரு தொடர்பு உள்ளது என்று இரகசியமாக் சில விஷயங்களைச் சொல்ல, குழப்பம் தீர்ந்து ஆச்சர்யத்தில் கண்களை விரித்தார் தர்மபுத்திரர்.
      இதற்குள் பீமன் கந்தமாதன  மலையை அடைந்தான். தங்கநிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த முனிவரை சந்தித்தான். அவர் உதடுகள் மட்டும் கருத்திருந்தன. இம்மலையில் தங்கிச் செல்ல வந்தாயா? என்று முனிவர் வினவ,  ‘இல்லை ஸ்வாமி, கண்ணன் சொன்னதால் தங்களை தரிசிக்கவே வந்தேன்...’ என்று பதிலுரைத்த பீமன் கண்ணன் சொன்னபடி அம்முனிவரை வணங்க மிக அருகில் நெருங்கிச் செல்ல முயன்றான். ஆனால் பீமனுக்கு அவரை நெருங்க இயலாத அளவுக்கு துர்நாற்றம் குடலைப் பிடுங்கியது. அந்த நாற்றம் முனிவரின் வாயில் இருந்து வந்தது. ஆனாலும் மூக்கை இறுக்கிப் பிடித்தபடி முனிவரை மிக அருகில் நெருங்கு முகத்தை உற்று நோக்கினான். என்ன ஆச்சர்யம். கருத்திருந்த முனிவரின் வாய் பொன்னிறமானது.
      ‘கண்ணா...என் தெய்வமே... என் வாய் நாற்றத்தை என்னாலேயே சகிக்க முடியாமல் இத்தனை நாட்கள் வாழ்ந்து கொண்டிருந்தேன்...இப்போது கருத்த வாயும் பொன்னிறமாயிற்று...துர்நாற்றமும் போய்விட்டது...நன்றி கண்ணா!’ என்று நன்றிப் பெருக்கில் கண்ணீர் விட்டார் முனிவர்.
      குழப்பமாய் நின்றிருந்த பீமனிடம் சொல்லத் தொடங்கினார் முனிவர்.
நான் செய்த பாவத்தினால் தான் இத்தனை காலங்கள் என் வாய் கறுத்திருந்தது...கறுத்த வாயைத் திறந்து பேசினால் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்தது. கண்ணனிடம் என் நிலை எப்போது சரியாகும் என்று கேட்டேன். பீமன் வந்து சந்திக்கும் போது சரியாகும் என்று சொன்னார். இன்று நீ வந்து என்னை சந்தித்து எனக்கு பாவ விமோசனம் கொடுத்து விட்டாய்..’
      பீமனுக்கு ஆச்சர்யம் விலகாமல் கேட்டான்... ‘அப்படி என்ன பாவம் செய்தீர்கள் முனிவரே?
      முனிவர் தொடர்ந்தார்.
       ‘தானத்தில் தலை சிறந்தது அன்னதானம். பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்ததால் என் உடல் பொன்னிறம் பெற்றது. ஆனாலும் என் ஆர்வக் கோளாறால் வயிறு புடைக்க உண்டவர்களை கஷ்டப்படுத்தி இன்னும் சாப்பிடுங்கள், இன்னும் சாப்பிடுங்கள் என்று வடையையும், பாயசத்தையும் அவர்களை உபசரித்துக் கொண்டே இருந்தேன். வயிறார சாப்பாடு போட்டு உபசரிப்பது மாபெரும் புண்ணியம். அதே சமயம் வயிறார உண்டவர்களை மேலும் மேலும் சாப்பிடு, சாப்பிடு என வற்புறுத்துவது மாபெரும் பாவச் செயல். ஒருவரின் உடலுக்கு ஆரோக்கியக் கேடு விளைவித்தால் அது பாவம் தானே? மேலும் அளவுக்கு மீறி பரிமாறுபவர்களுக்கும், உணவை சாப்பிட முடியாமல் மீதம் வைப்பவர்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு வரும் தானே? அது மட்டுமில்லாமல் உணவை உற்பத்தி செய்கின்ற விவசயிகளுக்கு நாம் செய்கின்ற துரோகம் தானே இச்செயல்? இவை அத்தனைக்கும் காரணமான அதிகப்பிரசங்கித்தனமாய் உபசரித்த வாய் மட்டும் கறுத்து போய், அதிலிருந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியது. உன்னால் அந்த தண்டனையில் இருந்து மீண்டேன்...நன்றி பீமா...’
      பீமனுக்கு தன் தவறு புரிந்தது. தன் கடுமையான உபசாரத்தினால் தான் யாகத்தில் சாப்பிட வருகின்ற கூட்டம் குறைந்து போனது என்பதை உணர்ந்து முனிவரிடம் விடைபெற்று கண்ணனை சந்தித்து மன்னிப்புக் கூறி பணிந்து நின்றான் பீமன்.
      எல்லாமே ஒரு அளவோடு இருந்தால் நல்லது. விருந்தோம்பலும் அது போல தான். அளவுக்கு மீறினால் அமிழ்தமும் விஷம் தான். விருந்தோம்பலும் கசந்து போகும்.

- காம்கேர் கே புவனேஸ்வரி