Wednesday 30 July 2014

வெர்ச்சுவல் உலகம் - சைபர் வேர்ல்ட்

காம்கேர் கே புவனேஸ்வரி
அப்பா, அம்மா, குழந்தைகளால் உருவாவது ஒரு குடும்பம்; ஒரு வீடு. பல வீடுகள் சேர்ந்தது ஒரு தெரு. பல தெருக்கள் சேர்ந்தது ஒரு ஊர். பல ஊர்கள் சேர்ந்தது ஒரு நகரம். பல நகரங்கள் சேர்ந்தது ஒரு நாடு. பல நாடுகள் இணைந்தது தான் இந்த உலகம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகில் நம் அனைவரையும் பின்னிப் பிணைப்பது மனிதாபிமானம் ஒன்று தான்.
நமக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது தான் கம்ப்யூட்டர். தனிநபர்களிடம் இருக்கின்ற கம்ப்யூட்டர்கள் அவர்களுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருப்பதால், அவற்றை ஒருங்கிணைத்து நெட்வொர்க்காக்கினால் அவற்றின் பயன்களை பலமடங்காக்கிக் கொள்ளலாம்; மேலும் தபால், தொலைபேசி இவற்றை விட இன்னும் அதிவேகமாக தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற உயரிய நோக்கத்தில் தான் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள தனிநபர்களிடம் இருக்கும் தனி கம்ப்யூட்டர்கள், ஒரே அலுவலக வளாகத்தினுள் அல்லது நிறுவனங்களுக்குள் லோக்கல் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர்கள், வெவ்வேறு இடங்களில் இயங்கி வரும் நிறுவனங்களுக்கான இன்ட்ராநெட் இணைப்பில் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை உலகளாவிய அளவில் இணைத்தால், மாபெரும் நெட்வொர்க்காக்கினால் உலகம் முழுவதும் இயங்கி வரும்  கம்ப்யூட்டர்கள் அனைத்துமே இணைக்கப்பட்டு பெரும் பயனை கொடுக்கும் என்ற யோசனையின் விளைவு தான் இன்டர்நெட் கண்டுபிடிப்பு.
இன்டர்நெட் & உலகம் முழுவதும் இயங்கி வரும் கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் இணைக்கின்ற ஒரு மாபெரும் நெட்வொர்க். இதன் மூலம் கிடைக்கின்ற பயன்களை விரல் விட்டு எண்ணி சொல்லி விட முடியாது.
மனிதர்களால் நிரம்பி வழியும் இந்த உலகில் மனிதர்களுக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வளர்ச்சியில், இன்டர்நெட் என்பது மற்றொரு உலகத்துக்கு வித்திட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.   
இன்டர்நெட் மூலம், நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்ய முடியும். எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டால் போதுமானது. எடுப்பார் கைப் பிள்ளை என்று சொல்வார்களே... அந்த பழமொழி இன்டர்நெட்டுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். யார் அதனை எப்படிப் பயன்படுத்துகிறார்களோ, அதற்கேற்ப அதன் பயன்பாடும் மாறுபடும். உதாரணத்துக்கு, ஒரு எழுத்தாளர் பயன்படுத்தும் போது இன்டர்நெட் தொழில்நுட்பம் ஏதோ அவருக்காகவே வடிவமைக்கப் பட்டதைப் போல தோன்றும். ஒரு ஆர்டிஸ்ட் பயன்படுத்தும் போது, ஒரு ஆர்டிஸ்டுக்காகவே தான் இன்டர்நெட் தொழில்நுட்பம் வடிவமைக்கப் பட்டதைப் போல தோன்றும். ஏன்...ஒரு குழந்தை பயன்படுத்தும் போது, அக் குழந்தைக்காகவே  இன்டர்நெட் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதைப் போல தோன்றும்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில், டிவியை பார்க்கிறோம், ரேடியோ கேட்கிறோம், செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகள் படிக்கிறோம், சினிமாவுக்குச் செல்கிறோம், கோயிலுக்கு போகிறோம், சமைத்து சாப்பிடுகிறோம், ஓட்டலுக்குச் செல்கிறோம், சுற்றுலா செல்கிறோம், வேலைக்குப் போகிறோம், நூலகம் செல்கிறோம், கடைக்குச் செல்கிறோம், பள்ளி, கல்லூரிக்கு செல்கிறோம், தொலைபேசி கட்டணம், மின் கட்டணம் என்று பல்வேறு கட்டணங்களை கட்டுகிறோம், வங்கிக்குச் செல்கிறோம், திருமணம் செய்கிறோம், குழந்தைகளை வளர்க்கிறோம், மருத்துவமனை செல்கிறோம்... இப்படி பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் போல மற்றொரு உலகம் இன்டர்நெட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை வெர்ச்சுவல் உலகம்(க்ஷிவீக்ஷீtuணீறீ கீஷீக்ஷீறீபீஎனலாம். கம்ப்யூட்டர், இன்டர்நெட் சார்ந்து உருவாகியிருக்கும் வெர்ச்சுவல் உலகை, சைபர் உலகம்(சிஹ்தீமீக்ஷீ கீஷீக்ஷீறீபீ) என்றும் சொல்லலாம்.
இன்டர்நெட் உலகத்தோடு இணைந்து பயணம் செய்யும் போது தான் நம்மால் இந்த உலகத்தோடு ஒட்டி வாழ முடியும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் நாம் செய்கின்ற அத்தனை வேலையையும், இன்டர்நெட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் வெர்ச்சுவல் உலகிலும் செய்ய முடியும்.
இப்போது இந்த உலகம் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. ஒன்று நேரடியாக அந்தந்த அலுவலகங்களுக்குச் சென்று வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது; மற்றொன்று இன்டர்நெட்டில் ஆன்லைனில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அவற்றைப் பெறுவது.
இனி வரும் காலத்தில் எல்லாமே இன்டர்நெட் மயமாக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள், தியேட்டர்கள், கடைகள், லைப்ரரிகள், பள்ளிகள், கல்லூரிகள்...இப்படி எல்லாமே இருக்கும் இடம் தேடி இன்டர்நெட் மூலம் வந்து விடும். மனிதர்களின்  சேவைகள் குறைந்து எங்கும் எதிலும் கம்ப்யூட்டர்  மற்றும் அதன் தொழில் நுட்பங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத குறையாக மனித உதவி குறைந்து போயிருக்கும். எனவே, இப்போதிலிருந்தே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தோடு இணைந்து வளர்ந்து வாருங்கள். அப்போது தான் இனி வரும் காலத்தில் மற்றவர்களை சார்ந்திருக்காமல் வாழ முடியும்.
நம் நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் நிறைய பேர் இருந்த காலகட்டத்தில், போஸ்ட் ஆஃபீஸிற்கு சென்று மணியார்டர் அனுப்பவும், கடிதம் எழுதவும், தங்களுக்கு வந்த கடிதத்தைப் படிக்கவும், வங்கிக்குச் சென்று பணம் கட்டவும், பணம் எடுக்கவும் எத்தனை பாடுபட்டார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் பிறரை சார்ந்தே வாழ வேண்டி இருந்தது. கல்வி கற்பவர்கள் அதிகரிக்க ஆரம்பித்த பிறகு இந்நிலை மாறியது. இன்றும் அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தட்டுத் தடுமாறி வருவதைக் காண முடிகிறது.
இமாலய உயரத்தை அடைந்த பிறகும், இன்னும்...இன்னும் என்று தொழில்நுட்ப தாகம் தணியாமல் வேக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய தொழில்நுட்ப உலகில் அதனோடு இணைந்து பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் எழுதப் படிக்கத் தெரியாத நபர்கள் எப்படி இச்சமுதாயத்தில் மற்றவர்களை சார்ந்தே வாழ வேண்டி இருந்ததோ அதே நிலை தான் உங்களுக்கும் ஏற்படும். அவர்களுக்காவது உதவி செய்ய படித்த மனிதர்கள் இருந்தார்கள். இனி வரும் காலத்தில் இயந்திரங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும். நீங்கள் இயந்திரங்களோடு தான் பயணிக்க வேண்டியிருக்கும். உதவி செய்ய மனிதர்கள் இருக்க மாட்டார்கள். இயந்திரங்கள் மட்டுமே இருக்கும்.
ஒரு சிறிய கற்பனை செய்து பாருங்கள்...உங்களுக்கு வங்கிக்குச் சென்று பணம் எடுக்க வேண்டும். வங்கியிலுள் உங்களைச் சுற்றி கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் இணைப்பில் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறன. உங்களுக்கு கம்ப்யூட்டரையோ, இன்டர்நெட்டையோ பயன்படுத்தத் தெரியாது. மனித நடமாட்டமே இல்லை. யாரிடம் உதவி கேட்பீர்கள்? உதவியையும் கம்ப்யூட்டரிடம் தான் கேட்க வேண்டும். அதில் பிமீறீஜீ பட்டனை அழுத்தி உதவி கேட்கலாம். ஆனால் அந்த பட்டன் எங்கிருக்கிறது? அதை கிளிக் செய்தால் அது என்ன சொல்கிறது? என்றெல்லாமாவது உங்களுக்குப் புரிய வேண்டுமே? எதுவுமே தெரியாது உங்களுக்கு...தலையைச் சுற்றுகிறது...பணம் எடுக்காமல் வீட்டிற்கு திரும்பி விடுகிறீர்கள். வங்கியில் உங்கள் அக்கவுண்டில் நிறைய பணம் இருந்தும், அன்றைய தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் தவிக்கிறீர்கள்.
வெர்ச்சுவல் உலகில் பயணிக்க அடிப்படை தொழில்நுட்பங்களை ஓரளவுக்காவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லை என்றால், மேலே சொன்ன கற்பனை நிஜமாவது உறுதி.
வளர்ந்து விட்ட அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் எல்லா வேலைகளையும் நாம் தான் செய்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது, டயர் பஞ்சரானால் பழுது பார்ப்பது, வாட்டர் சர்வீஸ் செய்து கொள்வது, வீட்டில் சுவருக்கு பெயிண்ட் அடிப்பது, டைல்ஸ் மாற்றுவது என்று சுலபமான வேலை முதல் கடினமான வேலை வரை அத்தனையையும் நாம் தான் செய்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான கருவிகள் வசதியாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் வளர்ந்து விட்ட மேலை நாடுகளில் ஜீவனம் செய்வது மகா கஷ்டம்.
அந்நாடுகளில் பயணம் செய்யும் போது வழி தெரியவில்லை என்று யாரிடமும் வழிகூட கேட்க முடியாது. ஜி.பி.எஸ் என்ற இயந்திரம் தான் காரில் வழி சொல்லிக் கொண்டே வரும். இயந்திரம் வழிகாட்டிக் கொண்டே வர, மனிதர்கள் அதன்படி காரை செலுத்திக் கொண்டே வருவார்கள்.

மேலைநாடுகளைப் பார்த்து நிறைய மாறிக் கொண்டே வரும் நம் மக்கள், அவர்களைப் போல தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் முழுமையாக பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் வரும் காலத்தில் நம் நாட்டிலும் இயந்திரங்கள் மனிதர்களை வழிநடத்தும் சூழல் உண்டாவது உறுதி. அப்போது தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரியாமல் தவிக்காமல் இருக்க இப்போதே கம்ப்யூட்டர், இன்டர்நெட் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள். எனவே, வந்த பின் திண்டாடுவதை விட, வரும் முன் காப்போம் என்ற கருத்தை மனதில் கொண்டு இதுவரை கம்ப்யூட்டர், இன்டர்நெட்டை விலக்கி வைத்திருந்தவர்கள் அதனோடு நட்பு பாராட்டத் தொடங்குங்கள்.
(நன்றி: நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - விகடன்)